அரிய பொக்கிஷம் ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு!

on Monday, November 22, 2010


1709 மார்ச் 30ம் தேதி புதுச்சேரியில் பிறந்த ஆனந்தரங்கப் பிள்ளை, கப்பல் ஓட்டிய முதல் தமிழர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர் உபயோகப்படுத்திய கத்தியும், கைத்துப்பாக்கியும் அவரது படுக்கை அறையில் தூசுபடிந்து ஒட்டடை மூடிக் கிடக்க, அவைகளோடு கேட்பாரற்றுக் கிடந்தவைதான் அவரது நாள்குறிப்பேடுகள். தினப்படி சேதிக் குறிப்பு என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தன அந்த நாள்குறிப்பேடுகள்.

பிரெஞ்சு-இந்திய ஆளுநர் டூப்ளே காலத்தில் அவரது தலைமை "துவிபாசி"யாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர் ஆனந்தரங்கப் பிள்ளை. தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசியம் எனப் பல மொழிகளை அறிந்தவர்.

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரிய செல்வந்தர். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" எனும் கப்பலுக்குச் சொந்தக்காரர். வெளிநாட்டு வணிகங்களுக்கு இக்கப்பலை அவர் பயன்படுத்தியுள்ளார்.

1846ம் ஆண்டு கலுவா மோம்பிரன் என்ற தமிழ் அறிந்த பிரெஞ்சுக்காரர் ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகையில் நுழையும் போதுதான் அவரது நாள்குறிப்பேடுகள் மானிடக் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

1736 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்ட நாள்குறிப்பு 1760 செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது.

இந்த நாள்குறிப்பு முழுவதும் ஒரே நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இவர் அரசியலிலும், வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்ட காலங்களில் எழுதப்பட்ட நாள்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டு கால தமிழக, இந்திய, உலக அரசியல், பண்பாட்டு, சமயச் செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன.

மோம்பிரன் தான் கண்டுபிடித்த நாள்குறிப்பை தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு தமிழில் இருந்தவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், பிரெஞ்சு அரசின் கீழ் புதுவையில் செயல்பட்ட எதுவாத் ஆரியேல் என்பவர், மூல நாள்குறிப்பை பிரதி எடுத்து பாரீஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சென்னை ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்த ஹெச். டாட்வெல்லின் உதவியோடு நாள்குறிப்பு முழுதும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த வேலை 1917ல் தொடங்கப்பட்டு 1928ல் முடிக்கப்பட்டது.

ஆனந்தரங்கப் பிள்ளை பல மொழிகள் அறிந்திருந்தும், தனது நாள்குறிப்பை தாய்மொழியான தமிழில்தான் எழுதினார் என்பதில் தமிழ்த்தாய்க்குப் பெருமையே. இருந்தும் அவரது நாள்குறிப்பு பிரெஞ்சு மொழியில்தான் முதன்முதலில் மக்களுக்குப் படிக்கக் கிடைத்தது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது.

நாள்குறிப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் கிடைத்தது. அதுவும் முழுமையாக இல்லை.

அன்று வரை நாள்குறிப்பு தமிழில் கிடைக்காதது குறித்து வருத்தப்பட்ட புதுவையில் உள்ள பிரெஞ்சுத் துணைத் தூதரகம் முழு முயற்சி எடுத்து 1948ம் ஆண்டு வேலையைத் தொடங்கியது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதன்பின் அந்த அச்சுவேலை கிடப்பில் போடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் படிக்க ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புண்ணியம் கட்டிக் கொண்டது.

1998ம் ஆண்டு நாள்குறிப்பின் முதல் எட்டு தொகுதிகளை ஒன்பது நூல்களாகப் பதிப்பித்தது. கடைசி நான்கு தொகுதிகளை 2005ல் பதிப்பித்து 2006ல் வெளியிட்டது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள்குறிப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் அது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம் என்று அறிவர்.

கலுவா மோம்பிரன் மட்டும் ஆனந்தரங்கரின் மாளிகை அழகை மேம்போக்காக இரசித்துக் கொண்டு சென்றிருப்பாரேயானால், இந்த நாள்குறிப்பு மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். தமிழ்த்தாயின் மகுடத்தில் ஒரு வைரக்கல் குறைந்து போயிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் வரலாறு இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடந்திருக்கும்.

புதுவை மாநில ஆளுநர்களில் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்படும் டூப்ளேயின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குப் பல அத்தியாயங்கள் கிடைக்காமலே போயிருக்கும். 1741 மார்ச்சில்,

  • மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது
  • இலஞ்சம் கொடுத்துப் பணி பெறுவது
  • கண்ட இடங்களில் மலம் கழிப்பவர்க்குத் தண்டனை தருவது
  • கிறிஸ்தவ கோயிலில் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏனையவர்க்கும் தனித்தனி இடம் ஒதுக்கியதால் பிரச்னை ஏற்பட்டது
  • பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள்
  • சாதிச் சண்டைகள் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட விசித்திரமான தண்டனைகள்
  • வணிகம் பற்றிய ஏராளமான செய்திகள்
  • அரசியல் சதுரங்கத்தில் ஆனந்தரங்கர் நகர்த்திய காய்கள் எவ்வாறு வெற்றியைத் தந்தன

முதலிய பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் துவிபாசி பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் கூடவேயிருந்து அரசாங்க நடப்புகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடையவர் அவர். அரசாங்கம் என்று ஒன்றிருந்தால், அதன் இரகசியம் என்று பல இருக்கும். இவற்றை வேறு யார் காதிலும் போடக்கூடாது என்ற எண்ணத்தோடு, தன் குறிப்பேடுகளுக்கு மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அது "டூப்ளே கால" இந்தியாவையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

  • அரசியல் சூழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள்
  • குடும்பச் சச்சரவுகள், வம்பு பேச்சுகள்
  • சமுதாய நிகழ்ச்சிகள், மதச் சடங்குகள், பண்டிகைகள்
  • கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை
  • ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரர்களின் அரசாளும் திறன்
  • போர்த் தந்திரங்கள், அன்னியர் அடித்த கொள்ளை, அக்கால மக்கள் பட்ட பாடு
  • அக்காலப் பிரமுகர்களின் வரலாறு, நீதியுரைகள், சோதிடக் குறிப்புகள்

என்று பல.

அதோடு மட்டுமல்லாமல் டூப்ளே, டூப்ளே மனைவி, இலபூர்தோனே, பராதி, இலாலி தொல்லாந்தால் போன்றவர்களின் வீரப் பராக்கிரமங்கள், அவர்களின் உரையாடல்கள், தில்லி, ஹைதராபாத், திருச்சி, தஞ்சாவூர், வந்தவாசி, ஆர்க்காடு போன்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் என்று பலவற்றுக்கு தன் நாள்குறிப்பில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

பல மொழிகளில் ஆனந்தரங்கர் புலமையுடையவர் என்பதை நாள்குறிப்பை நாம் புரட்டும்போதே தெரிந்து கொள்ளலாம். புலமைப்பற்று கொண்டு பல புலவர்களுக்கு உதவிய புரவலராயிருந்த ஆனந்தரங்கர், தன் நாள்குறிப்பை பண்டிதத்தமிழில் எழுதாமல் மக்கள் தமிழிலேயே எழுதினார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாள்குறிப்பு விறுவிறுப்பாகச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனந்தரங்கர் உயிரோடு நின்று நம்மிடம் பேசுகிறாரோ என்ற பிரமிப்புகூட நம்மிடையே தோன்றுகிறது.

ஆனந்தரங்கரின் ஜூன் இருபத்தொன்றாம் நாள் சேதிக் குறிப்பு தேவனாம்பட்டினம் போர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முன்வைக்கிறது. ஆளுநரைப் பார்க்கச் செல்லும் ஆனந்தரங்கரிடம், "நம்முடையவர்கள் நேற்று இராத்திரி போனவர்கள் கூடலூர் பிடிச்சுக் கொண்டார்களாம். செவுரோடு விழுந்தார்கள். தன் பேரிலே உள்ள சிறுது இராணுவுகள் கறனட்டகஸ்தானிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெட்டினார்களாம். கொஞ்சநஞ்சம் பேரிருந்தவர்கள் கதவைத் திறந்து ஓடச்சே வெளியிலே நம்முடையவர்கள் பிடித்துக்கொண்டு சரி கட்டிப் போட்டதாகவும் சிறிதுபேர் தப்பி ஓடிப்போனதாகவும் இப்படியாக ஒருத்தன் வந்து இப்போதான் மதாமுடனே சொன்னான். ஆனால் வெகுபேர்கள் செத்துப்போயிருப்பார்கள். வெகு சாக்குகளிருக்குமென்று" கடலூர் பிடிபட்ட தகவலைக் கூறுகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த வெற்றி எக்களிப்பிற்குப் பின் அவர் மனத்திலோடும் எண்ணங்களை அறிந்தவர்போல் "துரையவர்களுக்கு பெண்சாதி யித்தனை நிர்வாகம் பண்ணிக்கொண்டு தமக்கு அலுவலில்லாமல் பண்ணி நடப்பித்துக் கொண்டு போரானே யென்கிற உச்சாகம் ஒரு பாரிசம் தோற்ற, மற்றொரு பாரிசம், தன் பெண்சாதியைத் தொட்டு கூடலூர் தேவனும் பட்டணம் பிடச்சோமென்கிறது, சீர்மையிலே பிராஞ்சு இராசா முதலான இராசாக்கள் யெல்லாம் கொண்டாடலும், இந்தியாவிலே இருக்கப்பட்ட துலுக்கர் முதலான நபாபுகள், அமீர்கள், இராசா முதலாகிய பேர்கள், முன் சென்னப்பட்டணம் முசியே இலபுர்தொன்னே பிடித்துப் போட்டுபோக, யிவரைக் கொண்டாட கிடைச்சாப்போலே, இப்போதான் பெண்சாதியைக் கொண்டாடுவார்கள் என்கிற உச்சாகம் சரீரம் பூரிக்கப்பண்ண, யிந்தமட்டிலே இவள் யோசனையின் பேரிலே யல்லோ கூடலூர் சுறாயசமாய் கைவச மாச்சுதென்று சந்தோஷம்'' என்று எழுதுகிறார் அரங்கர்.

சரித்திரம் படைத்த இந்தியர்களின் சரித்திரத்தை வெள்ளைக்காரன்தான் எழுதினான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியர்களுக்கு சரித்திரக் கருத்தில்லை என்பதை ஏற்பதற்கில்லை. 1761 ஜனவரி 11ம் தேதி இன்னுயிர் நீத்த ஆனந்தரங்கப் பிள்ளைகூட பொக்கிஷம் போன்ற நாள்குறிப்பினை விட்டுத்தானே சென்றிருக்கிறார்.

No comments:

Post a Comment