"இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்

on Thursday, December 23, 2010


தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில், தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த் தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும்.


காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.



அத்தகு அரியநாத முதலியார் வழிவந்த சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலிச் சீமையை ஆண்டுவந்த மேடைதளவாய் திருமலையப்ப முதலியாரின் சகோதரி மகள் உலகண்ணியை திருமணம் செய்துகொண்டார். திருமலையப்ப முதலியார் ஆர்க்காடு நவாபு மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கியவர். அவர் ஒரு முறை தென்காசிக்கு அருகிலிருக்கும் வெள்ளக்கால் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கு ஓர் அழகான மாளிகை கட்டி குடியேறினார்.


சோழவந்தான் சுப்பிரமணிய முதலியார் - உலகண்ணி தம்பதியரின் குடும்பம் செழித்து தழைத்தது. அவர்களது புதல்வர் பழனியப்ப முதலியாருக்கு 1857ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14ம் நாள் பிறந்த தலைமகனுக்கு தாத்தாவின் பெயரான சுப்பிரமணியம் என்ற பெயர் இடப்பட்டு அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தனது தாத்தாவின் பெயரைப்பெற்று விளங்கிய பெயரன்தான் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்.
பிள்ளைப் பருவத்தை வெள்ளக்காலில் கழித்தபிறகு சிறந்ததொரு கல்வி கற்றுத்தேற தனது அத்தையின் கணவர் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தெற்குப் புதுத்தெருவில் அமைந்திருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி தொடங்கியது. பின்னர் வெ.ப.சு திருநெல்வேலி அரசடிப் பாலத்தில் இருந்த மிஷன் பள்ளியில் தமிழோடு ஆங்கிலமும் கசடறக் கற்றுத் தேர்ந்தார்.

அரண்மனையில் முத்துசாமிப்பிள்ளை என்னும் அந்தகர் (பார்வையற்றவர்) பணிபுரிந்து வந்தார். அவரிடமிருந்து
பாரதம்
இராமாயணம்
திருவிளையாடற்புராணம்
முதலிய இதிகாசங்களையும் மற்றும் பல புராணங்களையும் வெ.ப.சு வாய்வழியாக கற்றறிந்தார்.

மேலும் அந்த அரண்மனையிலேயே,
பாரத அம்மானை
வைகுண்ட அம்மானை
பவளக்கொடி மாலை
அல்லி அரசாணி மாலை
ஆகியவற்றை இளம்பருவத்திலேயே தினந்தோறும் கேட்டறிந்து வளர்ந்ததால் வெ.ப.சு இலக்கிய விருப்பத்திற்கு அவை பேருதவி புரிந்தன.

அவர் தம் பதினான்கு வயதிற்குள்ளாகவே,
திருக்குற்றாலத் தலபுராணம்
வரகுணாதித்தன் மடல்
விறலிவிடு தூது
கூளப்ப நாயக்கன் காதல்
ஆகிய சிற்றிலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.
வேம்பத்தூர் பிச்சு ஐயர்,
கல்போது புன்னைவனக் கவிராயர்,
அருணாசலக் கவிராயர்,
சுப்பிரமணியக் கவிராயர்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்
ஆகிய பெரும்புலவர்கள் கூடும் சங்கங்களிலும் வெ.ப.சு பங்கேற்று அவர்களிடமிருந்து இலக்கிய அறிவை வளப்படுத்திக்கொண்டார்.


இப்படியாக இருபது வயதிற்குள்ளாக சிற்றிலக்கியங்களை கற்றுத் தெளிந்தார். பிறகு அவர்,
நன்னூல்
இலக்கணக்கொத்து
இலக்கண விளக்கச் சூறாவளி
தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி
பிரயோக விவேகம்
ஆகிய இலக்கண நூல்களைக் கசடறக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி சந்திப்பில் அமைந்த இந்துக் கலாசாலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வகுப்பில் சேர்ந்தார்.
டி.என்.சிவஞானம் பிள்ளை இவரின் உற்ற தோழராக இருந்தார். தம் தோழரின் வற்புறுத்தலினால் சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றார். அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் ஏற்படும் ஐயங்களைப் போக்க வெ.ப.சு விடம் வந்து தெளிந்து செல்வார்களாம். அத்தகைய சூழலில் அவர்களுக்காகவே கம்பராமாயணத்தை வெ.ப.சு ஊன்றிப்படித்தாராம்.



அக்கல்லூரியில்தான்,
டாக்டர் மில்லர், கூப்பர்,
அலெக்ஸாண்டர்,
பேட்டர்சன்,
மெக்டனால்டு
ஆகிய வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும்,
சுப்பராமையர்,
ரெங்கையச்செட்டி,
சின்னச்சாமி பிள்ளை,
ரெங்கசாமிராசா
ஆகிய ஆசிரியப் பெருந்தகையாளர்களிடம் மிகச்சிறந்த கல்வியையும் மேலான ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு அத்தகைய வாழ்நெறிகளைத் தவறாமல் கடைபிடித்து வந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இருமொழிப் புலமையையும் கிறித்துவக் கல்லூரியிலேயே கற்றுத் தெளிந்திருக்கிறார் வெ.ப.சு
சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து 1884ம் ஆண்டில் ஜி.எம்.ஏ.சி என்னும் வேளாண்மை பட்டம் பெற்றார். 1895ம் ஆண்டு கால்நடை மருத்துவத் துறையில் "முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராக" பதவி உயர்வு பெற்று, ஆறாண்டுகள் கழிந்த பின்னர் 1911ம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.


கால்நடை அறிவியல் துறை வாயிலாக வெ.ப.சு தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் தொண்டுக்கு தாய் தமிழ்மேல் பற்றுகொண்ட யாவரும் வெ.ப.சு வுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்திய கால்நடைக்காரர் புத்தகம் மற்றும் இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகின்ற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய நூல் என்னும் இரு நூல்களும் வெ.ப.சு சீரிய தமிழ் மொழியாக்கத்தில் அரசு உதவியுடன் வெளியிடப்பட்டது. மேல்நாட்டு கால்நடை மருத்துவம் பற்றி தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நூல்கள் இவை. மேலும் அறிவியல் நூல்களை இனிய தமிழில் ஆக்கிக்காட்டியவர்களில் வெ.ப.சுவும் ஒருவர்.


1916ம் ஆண்டு வெ.ப.சு திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகி, 1919ல் பதவி உயர்வு பெற்று, அதன் துணைத் தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டில் தலைவராகவும் உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையைக் கண்ட அன்றைய அரசாங்கம், அவரை 1922ம் ஆண்டு தென்காசி பெஞ்ச் கோர்ட்டின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளைக் கண்டு வியந்து, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு 1926ம் ஆண்டு "இராவ் சாகிப்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.


சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் உருவாக்கிய "கலைச்சொற்கள்" அகராதி நூல் தயாரிப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டார். அதுபோல வேளாண்மைத் துறைக்கான கலைச் சொல்லாக்கம் இவரின் பெரு முயற்சியாலே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



உ.வே.சாமிநாதய்யர்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
"பத்மாவதி சரித்திரம்" நாவலை எழுதிய மாதவையா
மு.ரா. அருணாசலக் கவிராயர்
இரசிகமணி டி.கே.சி
ஹிருதாலய மருதப்ப தேவர்
கவிராஜர் நெல்லையப்ப பிள்ளை
போன்றோருடன் வெ.ப.சு நட்பு கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 25 ஆண்டுகள் அரும்பணியாற்றி தமிழ்த்துறையை மேன்மை அடையச்செய்தார்.


வெ.ப.சு வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டு "வெ.ப.சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்" என்னும் பெயர்பெற்று திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரி ஆட்சிமன்றக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது.



உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட "சுவர்க்க நீக்கம்" (Paradise Lost) என்ற மில்டன் எழுதிய உன்னத காவியத்தை தமிழில் அழகுற செய்யுளில் படைத்தவர் வெ.ப.சு. இவர் படைத்திருக்கும்,
இலக்கிய நூல்கள்
அகலிகை வெண்பா
கம்பராமாயண சாரம் (7 காண்டங்கள்)
கல்வி விளக்கம்
கோம்பி விருத்தம்
சருவசன செபம்
தனிக்கவித் திரட்டு
நெல்லைச்சிலேடை வெண்பா
இராமாயண உள்ளுறை பொருளும்
தென்னிந்திய சாதி வரலாறும்
ஆகியவை.


கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேன்மைகொண்டு விளங்கிய ஆயிரம் பிறைகண்ட செந்தமிழ் தொண்டர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 12.10.1946ல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவர் திருப்பெயர் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை



"இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.

மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.


1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி, "வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்," என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.

புரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்,
டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்),
ஹில்டகார்டு மற்றும் பலர்.


இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய "The Poets of the Powers" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.
தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;

இறையனார் அகப்பொருள்
தொல்.சொல் (நச்சர் உரை)
தஞ்சைவாணன் கோவை
வீரசோழியம்
யாப்பருங்கலம் காரிகை
அஷ்டபிரபந்தம்
யசோதரகாவியம்
நளவெண்பா
முதலியன.

இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.


பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர்
திருக்கண்ணபிரானார்
அற்புதவிளக்கு
குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
அரிச்சந்திர புராணச் சுருக்கம்
அராபிக்கதைகள்
முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர;
அம்பலவாணன்
இளங்கோவன்
என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.

இவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;
"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது." (நவசக்தி 8.4.1938).


திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். "தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.
1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் "உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக," என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.

இது தவிர;

செந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது)
கன்னித் தமிழ்க்களஞ்சியம்
கலைமாமணி
ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.


படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.
தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.

இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

தேசத்தின் சொத்து மாமனிதர் தோழர் ப.ஜீவானந்தம் பிள்ளை

on Sunday, December 12, 2010


வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.

ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.

அவர்கள் குல தெய்வம் அது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.

அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார்."ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார்.காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.

காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.

அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.

சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.

ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை "உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-

"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.

"உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.

இறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார்.

"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.

ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.

பிறகு "இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.

கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.

மரணமா? அவருக்கு மரணமேது?

நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது?

மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.

தமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை




"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய்,
அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."

என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்தார்.

கற்றல்
கற்பித்தல்
கவிபுனைதல்
எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று.



பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார். பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், "எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது," என்பார்.
சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப் பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.



மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார்.
நெடுங்கணக்கு
ஆத்திச்சூடி
அந்தாதிகள்
கலம்பகங்கள்
பிள்ளைத்தமிழ் நூல்கள்
மாலைகள்
சதகங்கள்
நிகண்டு
கணிதம் மற்றும்
நன்னூல்
போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.



கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்" என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.



"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின்
மேயவித்தான் மூவராகும் விளம்பியதென்
தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."
இப்பாட்டில்,

ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி - நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை

"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது
பொருளாகும்.


மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:

"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்
தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி."

சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத் துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த,
முத்துவீர வாத்தியார்
திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்
முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை" எனக் குறிப்பிட்டனர்.
மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவர்
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை
மழவை மகாலிங்கையர்
ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார்.
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார்.



திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும்
கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார்.


இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.
பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித்
தலபுராணங்களும்
பதிகங்களும்
அந்தாதிகளும்
அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ்
கலம்பகம்
கோவை
உலா
தூது
குறவஞ்சி
முதலான நூல்களும் இயற்றினார்.


1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார்.


1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.


1871ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் சென்றுவந்தார்.


பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876ல் தம் 61ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன்
இணையிலாப் புலவன்
மெய்ஞானக் கடல்
நாற்கவிக்கிறை
சிரமலைவாழ் சைவசிகாமணி
முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.
தலபுராணங்கள் 22
சரித்திரம் 3
மான்மியம் 1
காப்பியம் 2
பதிகம் 4
பதிற்றுப்பத்தந்தாதி 6
யமக அந்தாதி 3
மாலை 7
பிள்ளைத்தமிழ் 10
கலம்பகம் 2
கோவை 3
உலா 1
தூது 2
குறவஞ்சி 1
பிறநூல்கள் 7
என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை
எனப் போர்த்த பண்பின்மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்." - என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே.

எழுதிய நூல்கள்

இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.

  1. திருவானைக்காத் திருபந்தாதி
  2. திரிசிராமலை யமகவந்தாதி
  3. தில்லையமக அந்தாதி
  4. துறைசையமக அந்தாதி
  5. திருவேரகத்து யமக அந்தாதி
  6. திருக்குடந்தை திருபந்தாதி
  7. சீர்காழிக்கோவை
  8. குளத்தூக்கோவை
  9. வியாசக்கோவை
  10. அகிலாண்டநாயகி மாலை
  11. சிதம்பரேசர் மாலை
  12. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  13. திருநாகைக்க்ரோண புராணம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை



"பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர்.

திரையுலகப் பாடல்கள் பட்டிருந்த கறை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டை. தமிழக ஏழை உழைப்பாளிகளும், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்களும் தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்துத் தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் கண்டனர்.

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

என்றும்

காயும் ஒருநாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்

என்றும் நம்பிக்கை தந்தார்.

உழைப்பை மதித்திதுப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்!
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்

என்று உலகளாவிய அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார். மறைந்து கொண்டிருந்த தமிழ்த் தென்பாங்கு, சிந்து, இலாவணி போன்ற நாட்டுப் பாடல்களின் கூட்டிசைக்குப் புத்துயிரூட்டத் திரையுலகில் தனக்குக் கிடைத்த பத்தாண்டு எல்லையில் மற்றவர்கள் நூற்றாண்டு எல்லையில் செய்ய முடியாத செயலைச் செய்து, மிக சிறிய வயதில் இயற்கை எய்தினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காற்றிலே மிதக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது, ஏட்டில் சிறப்புறும் இலக்கியமாகவும் இருக்கின்றன. திரைப் பட கவிஞர்களில் இவரைப் போன்ற சமூக மறுமலர்ச்சி மக்கள் கவிஞரை, புதிய சமதர்ம சமுதாய இலட்சியக் கவிஞரை நாம் கண்டதில்லை.

ஒரு சாதாரண உழவர் குடும்பத்தில் பிறந்த இவர் (13-4-1930), உழவுத் தொழிலில் முனைந்து, படிப்படியாய் கவிதைகள் இயற்றி புலவர் மணியாய்த் திகழ்ந்து மிகச் சிறியவயதில்(29) இயற்கை எய்தினார். 1951ம் ஆண்டு "படித்த பெண்" எனும் திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடலை இயற்றித் திரைப்பட உலகில் நுழைந்தார்.

உழவர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் உருகி நாடோடி மன்னனில் இவர் எழுதியது:

சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி, சோம்பலில்லாமல் ஏர் நடத்தி...நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் உள்ள மரஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்கு கையுங் காலுந்தான் மிச்சம் ?

தொழிலாளர்கள் பற்றி எழுதியது:

செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்

குழந்தைப் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொன்னது:

திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்கு பயந்து விடாதே
சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி கேளடா
தூங்காதே தம்பி! தூங்காதே தம்பி, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ ஏன் படைத்தோம் என்பதை மறந்துவிடாதே
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட

தத்துவக் கருத்துகள் சொன்ன பாடல்கள்:

இதுதான் உலகமடா! பொருள் இருந்தால் வந்து கூடும்..
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே..
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்..
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே-அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்..
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
அது இருந்தா இது இல்லை-இது இருந்தா அது இல்லை..
வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே நாடிநிக்குதே அநேக நன்மையே
அறம் காத்த தேவியே-குலம் காத்த தேவியே-நல் அறிவின் உருவமான ஜோதியே

காதல் பாடல்கள்:

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்..
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது
முகத்தில் முகம் பார்க்கலாம்-விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே
இன்று நமதுள்ளமே - பொங்கும் புது வெள்ளமே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா ?
வாடிக்கை மறந்ததும் ஏனோ - என்னை வாட்டிட ஆசைதானோ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று
ஆசையினாலே மனம் -ஓஹோ - அஞ்சுது கொஞ்சுது தினம்
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது
ஆடை கட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே- கொந்தளிக்கும் நெஞ்சிலே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா

பட்டுக்கோட்டை பல கஷ்டங்களுக்கிடையே, தன் சுயமுயற்சியாலும், இலட்சியத் தெளிவாலும் திரையுலகின் உன்னத நிலையைய் அடைந்தார். சினிமாவில் பெரும் புகழ் அடைந்த போதும், அவர் எப்போதும் விவசாய இயக்கத்தையும், கம்யுனிஸ்ட் கட்சியையும் மறந்த்ததில்லை. தான் பின்பற்றிய கட்சியின் இலட்சியத்தை உயரும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது பாடுபட்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காலத்தால் மறையாது என்றென்றும் நிலைத்து நிற்கும்."

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை வரிகள்




1) தனியுடமை
கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...


2) திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

3) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

4) குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா.

5) ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ – குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?